search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளர்கள் படுகாயம்"

    ராஜபாளையத்தில் வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது, சுவர் இடிந்து இருவர் சிக்கினர். ஒரு மணி நேரம் போராடி இருவரும் மீட்கப்பட்டனர்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையம் துரைச்சாமிபுரம் காட்டுத் தெருவைச் சேர்ந்த ராமர் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இவரது வீட்டின் அருகே மாரியம்மாள் என்பவரது பழைய ஓட்டு வீடு உள்ளது. புதிய வீட்டிற்காக தொழிலாளர்கள் அருகில் உள்ள மாரியம்மாள் வீட்டின் முன் நின்று பள்ளம் தோண்டிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மாரியம்மாள் வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் முனியாண்டி (வயது 30), வேலுராஜ் (42) ஆகிய இருவரும் சிக்கிக் கொண்டனர்.

    உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்க முயற்சித்தனர். முடியாததால் காவல் துறை மற்றும் தீ அணைப்பு நிலையத்தினருக்கு தகவல் அளித்தனர்.

    தகவல் அறிந்து வந்த தீ அணைப்பு நிலையத்தினர் மற்றும் தெற்கு காவல் நிலையத்தினர் இடி பாடுகளில் சிக்கியிருந்த முனியாண்டியை முதலில் காயங்களுடன் மீட்டனர். வேலுராஜ் இடது கால் மீது மண்சுவர் இடிந்து விழுந்ததால் அவரை உடனடியாக மீட்க முடிய வில்லை.

    கயிறு மூலம் இடிந்த சுவற்றைக் கட்டி தீ அணைப்பு நிலையத்தினரும், காவல் துறையினரும் ஒரு மணி நேரம் போராடி மண் சுவரை அகற்றி மீட்டனர். வேல்ராஜை மருத்துவமனை கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ் ஒரு மணி நேரமாக வராததால், ஆட்டோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்து, பின்னர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் மேல் டி.பி. மில்ஸ் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    திருவையாறு அருகே இன்று காலை ரோட்டில் வேன் கவிழ்ந்த விபத்தில் 40 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

    திருவையாறு:

    அரியலூர் மாவட்டம் கரைவெட்டி பரதூரை சேர்ந்த 40 விவசாய தொழிலாளர்கள் இன்று காலை திருவையாறுக்கு வேலைக்கு செல்ல ஒரு வேனில் புறப்பட்டனர். கரைவெட்டி பரதூர் கிராமம் திருவையாறுக்கு அருகில் உள்ளது. இதனால் இவர்கள் தினமும் வாகனங்களில் திருவையாறுக்கு வேலைக்கு வந்து செல்வது வழக்கம்.

    இதேபோல் இன்று காலையும் சுமார் 40 பேர் வேனில் திருவையாறுக்கு வந்து கொண்டிருந்தபோது கஸ்தூரிபாய் நகரில் அருகில் சாலையின் குறுக்கே ஒரு நாய் திடீரென ஓடியதால் வேன் டிரைவர் திடீர் பிரேக் போட்டுள்ளார். இதில் வேன் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது வேனில் இருந்த 40 பேரும் வேனுக்குள் சிக்கி படுகாயமடைந்தனர். இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு உடனடியாக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் முதலுதவி சிகிச்சைக்குப்பின் 10 பேர் மட்டும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தகவலறிந்த திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பட்டிவீரன் பட்டியில் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகே உள்ள பட்டிவீரன்பட்டி பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம். தனியார் பள்ளி ஆசிரியராக உள்ளார். இவர் பட்டிவீரன்பட்டியில் ஒரு பழைய வீட்டை விலைக்கு வாங்கி அதில் மராமத்து பணிகள் மேற்கொண்டு வந்தார்.

    இன்று அய்யம்பாளையத்தைச் சேர்ந்த 7 கட்டிட தொழிலாளர்கள் 3-வது மாடியில் இருந்து சுவரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 2-வது தளத்தில் 3 தொழிலாளர்கள் இருந்தனர். பழமையான சுவர் என்பதால் 3-வது மாடியில் தரை பகுதி இடிந்து திடீரென கீழே விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த சாரதா, ராஜவேலு, நாட்ராயன் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.

    படுகாயமடைந்த சாரதா தேனி அரசு ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×